எழுத்தின் அளவு: அ+ அ- அ
வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்து கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் உத்தரவிட்டார். எனினும், இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததால், பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய அரசின் சிறப்பு செயலர் மற்றும் வர்த்தக துறை செயலர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு, அந்நாட்டு பிரதிநிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்தியா மீது வரிவிதிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என தெரிகிறது. அதேசமயம், இருநாடுகளுக்கு இடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் அமெரிக்க குழு டெல்லி வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா தனது நெருங்கிய நண்பன் எனவும், இருப்பினும் மற்ற நாடுகளை காட்டிலும் தங்கள் பொருட்கள் மீது அதிக வரியை இந்தியா விதிப்பதாகவும் கூறினார். விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யவில்லை என்றால் இந்தியா மீது 20 முதல் 25 சதவீத வரி கூடுதலாக விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.